15. சாகசம்
தத்தனுடன் சந்நிதிக்குச் சென்ற சார்வாகனை மீண்டும் நான் கருதியபோது அவர்கள் இருவரும் சந்நிதியில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தார்கள். சார்வாகன் எப்போதும் போல அமைதியாகவும், தத்தன் உணர்ச்சிகளின் பிடியில் மொத்தமாகத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டவனைப் போலவும் காணப்பட்டார்கள். தத்தன் அழுதுகொண்டிருந்தான். அது ஆனந்தப் பரவசக் கண்ணீர் என்று புரிந்தது. ஆனால் அதற்கெல்லாம் என்ன அவசியம் என்பது விளங்கவில்லை.
சார்வாகனின் மனத்தில் தத்தன் ஒரு குழந்தை என்ற எண்ணம் உருவாகியிருந்தது. இயற்கை சிலவற்றைத் தன்னியல்பாக ஒன்று சேர்த்து வைக்கும். தாற்காலிகமாகவும் நிரந்தரமாகவும். எது தாற்காலிகம், எது நிரந்தரமென்று கண்டறிய முடியாதது மட்டுமே அதில் உள்ள புதிர். மனிதர்கள் பெரும்பாலும் அப்புதிரை விடுவிக்க முயற்சி செய்வதில்லை. எல்லாம் அதன் போக்கில் போவது போல இதுவும் எதுவும் போய்ச் சேர்ந்துவிடுமென்ற நம்பிக்கை எப்படியோ எல்லோருடைய மனத்திலும் காலூன்றி நின்றுவிடுகிறது. சிக்கலேதுமில்லை. தவிர்க்க முடியாத எதையும் எதிர்கொண்டே தீர வேண்டும்.
அவன் தத்தனின் இல்லத்தைக் குறித்தும் அவனது எதிர்காலம் குறித்தும் கவலை கொண்டான். சந்நிதியில் தத்தன் சந்நதம் வந்தவனைப் போல நடந்துகொண்டதைச் சார்வாகன் நினைவுகூர்ந்தான்.










Add Comment