பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. தன் கணவரின் வினய் நர்வாலின் உயிரற்ற உடலருகே தனிமையில் அமர்ந்திருந்த புதுமணப் பெண் ஹிமான்ஷி நர்வாலின் புகைப்படம் இன்றும் இந்தியர்களின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் செயல்படும் மதவாதப் பயங்கரவாதம், இந்தியப் பாதுகாப்புக்குத் தீர்க்கப்பட முடியாத ஒரு சவாலாகவே நீடிக்கிறது.
கி.பி. 712இல் முகமது பின் காசிம், சிந்து நிலப்பரப்பைக் கைப்பற்றியதன் மூலம் இந்தியத் துணைக்கண்டத்துக்குள் இஸ்லாம் கால்பதித்தது. தொடக்க காலத்தில் சூஃபி துறவிகளின் போதனைகளில் இருந்த அன்பும் சகிப்புத்தன்மையுமே இஸ்லாமிய முகமாக இந்தியர்களுக்கு அறிமுகமானது. எனினும், காலப்போக்கில் மதகுருமார்களின் ஆதிக்கம் மேலோங்கியது. பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு இம்மதகுருமார்களின் ஆதிக்கமே முதன்மைக் காரணியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
1947 ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவிலிருந்து பிரிந்து உருவான பாகிஸ்தான், வன்முறை மற்றும் ரத்தக் கறையுடனே பிறந்தது. இருதரப்பிலும் சுமார் ஒரு கோடியே எழுபது லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போதுமான நிதி ஆதாரங்களோ, தொழில்வளமோ, வலுவான நிர்வாகக் கட்டமைப்போ இல்லாமல் ஒரு தேசமாக பாகிஸ்தான் தடுமாறியது.















Add Comment