74. தணியாத் தணல்
கடிகைக்கு வந்து போகும் பிள்ளைகளும் அங்கே தங்கிப் படிக்கும் பிள்ளைகளும் சில நாள்களாக ஆசிரமத்துப் பக்கம் வருவதில்லை என்பதைக் கவனித்தேன். உதுமானி நாயனார் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் பணி அளித்து அனுப்பியிருக்கலாம். அல்லது மீண்டும் அழைக்கும் வரை யாரும் வர வேண்டாம் என்றே சொல்லியிருக்கலாம். அபுது, காளத்தி, செங்கொடி, அருங்கலமணி, காயாமலர், எல்லன் என்று அவர் தனது இரகசியப் பணிகளில் ஈடுபடுத்தும் மாணாக்கர்கள் மட்டுமே கடிகையில் இருந்தார்கள். அந்தச் சில நாள்களில்தான் எனக்கு அவரது ஒற்றர்கள் யார் யார், அவர்களது பெயர்கள் என்ன என்கிற விவரமும் தெரிய வந்தது. அது தெரிந்து எனக்கு ஆகப் போவது ஏதுமில்லைதான். ஆயினும் சாதாரண மனிதர்கள் இயங்கும் திசைக்கு முற்றிலும் எதிரானதொரு திசையில் அல்லும் பகலும் எதையோ எண்ணி உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு சிறிய கூட்டத்தைச் சரியாகத் தெரிந்து வைத்துக்கொள்வது என்றேனும் உதவக்கூடும்.
விசித்திரம்தான். சார்வாகனைத் தேடி முதலில் வந்தேன். எங்கெங்கோ அலைந்து திரிந்து வேட்டன் எறிபத்தன், மயூரமுகி, மாயமுனி, மந்திரவாதி வழியே நெடுந்தொலைவு சென்றுவிட்டேன். அது ஒரு கூட்டம். அதற்கொரு இலக்கு. பிறகு உதுமானி நாயனார், அவரது மாணாக்கர்கள், கருவூர்ச் சித்தர் என்று இங்கோர் இனக்குழு.
மனிதர்கள் யாரும் தனித்து இயங்குவதில்லை. நல்லவையும் அல்லவையும் நான்கு பேராகச் சேர்ந்து செய்தால்தான் அவர்களுக்கு நிறைவு உண்டாகிறது. அடித்துக்கொண்டாலும் வெட்டிக்கொண்டு மாண்டே போனாலும் நான்கு பேர் அவசியம். மாண்டவரை எடுத்துச் சென்று கடைத்தேற்றவாவது.










Add Comment