வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அத்துமீறல் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், எக்காரணத்துக்காக அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டதோ அதில் மட்டுமே அதிபர் டிரம்ப்பின் முழுக் கவனமும் இருக்கிறது. அதிபர் மதுரோவை அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கடத்தி வந்தாயிற்று. அடுத்து என்ன? அவர்களை விட வெனிசுவேலாவின் எண்ணெய் முக்கியமல்லவா? அதையும் அமெரிக்காவுக்குக் கடத்தி வரும் பகல் கொள்ளை தொடங்கிவிட்டது.
அதன்படி, உடனடியாக இரண்டு பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது வெனிசுவேலா. பெருமளவில் (68%) சீனாவுக்குச் செல்ல வேண்டிய எண்ணெய் அது. கணிசமான அளவில் (23%) அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருந்த சரக்கும் கூட. எஞ்சிய எண்ணெய் கியூபா, ஸ்பெயின், ரஷ்யா உட்பட வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதியாக வேண்டியது. ஆனால், இப்போது அனைத்தையும் அமெரிக்காவுக்கு மடைமாற்றச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் டிரம்ப். பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய வெனிசுவேலாவின் ஐந்து எண்ணெய்க் கப்பல்களை இதுவரை முடக்கியுள்ளது அமெரிக்கா.















Add Comment