31. மின்னோட்டம்
பைகாரா நீர்மின் திட்டம் உருவான வரலாற்றுக்குப் போவதற்கு முன்பாக நீரிலிருந்து எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன, அப்படித் தயாரிக்கும் மின்சாரம் எப்படி நம் வீடு வந்து சேர்கிறது என்பதைப் பார்த்துவிட்டால் இந்த அதிசயத்தின் தீவிரத்தில் நம்மால் ஆழமாக மூழ்க முடியும்.
நீலகிரி மலையின் மகுடமாகத் திகழும் பைகாரா நீர்மின் திட்டம், தென்னிந்தியாவின் மின்சார வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மைல்கல். இத்திட்டம் வெறும் பொறியியல் பணி மட்டுமல்ல, அப்போதைய சென்னை மாகாணத்தின் பொருளாதாரப் பாதையையே மாற்றியமைத்த ஒரு சரித்திரச் சாதனை. பைகாரா நீர்மின் திட்டத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பு ஒரு பொறியியல் அதிசயம். மலை உச்சியில் இருக்கும் தண்ணீரின் ‘நிலை ஆற்றலை’ (Potential Energy), மிகக் குறுகிய தூரத்தில் ‘இயக்க ஆற்றலாக’ (Kinetic Energy) மாற்றி மின்சாரம் எடுப்பதுதான் இதன் அடிப்படை இயக்க அறிவியல்.
பைகாரா திட்டம் ஓர் அதி உயர் நீர்மின் திட்டம் (high head). அதாவது, நீர் சேமிக்கப்படும் இடத்துக்கும் (reservoir), மின் உற்பத்தி நிலையம் (power house) இருக்கும் இடத்துக்கும் இடையே மிக அதிகமான உயர வேறுபாடு இருக்கும். பைகாராவில் இந்த உயர வேறுபாடு சுமார் 3,000 அடி (914 மீட்டர்). இவ்வளவு உயரத்திலிருந்து விழும் நீர், மிகக் கடுமையான அழுத்தத்துடன் டர்பைன்களைச் சுழற்றுகிறது.















Add Comment