164. நிபந்தனைகளோடு தடை
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் உச்ச நீதிமன்றத்தின் மீதுதான் இருந்தது. இந்திரா காந்தி தன் மேல் முறையீட்டு மனுவில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீதான தடை, எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும்வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரி இருந்தார்.
ராஜ் நாராயண் தரப்பில், நிபந்தனைகள் ஏதுமில்லாத தடை வழங்கப்படக் கூடாது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் ஒருவர் மேல் முறையீடு செய்யும்போது நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள்படியே இந்திரா காந்தி விஷயத்திலும் தடை நீட்டிப்பு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதாவது, ராஜ் நாராயணின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் இந்திரா காந்தி ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர முடியும். ஆனால் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவோ, வாக்கெடுப்பில் வாக்களிக்கவோ முடியாது.
ஜூன் 23. சுமார் 100 வழக்கறிஞர்கள், 25 முக்கியப் பார்வையாளர்கள், 23 பத்திரிகையாளர்கள் என நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. உள்ளே இடமில்லாமல் ஏராளமானவர்கள் வெளியில் குழுமி இருந்தார்கள். தேவையில்லாத கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நீதிமன்ற வளாகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அதனைத் தாண்டிப் பாதுகாப்புப் போலிசார் நிறுத்தப்பட்டு இருந்தார்கள்.















Add Comment