மதிமுக முதல் மறுபடியும் திமுக வரை
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது யாருக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் மதிமுகவுக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணியில் கடைசியாக இணைந்து ஒரு மாநிலங்களவை சீட்டையும் பெற்றுவிட்டது தேமுதிக. மதிமுக தரப்புக்கு மாநிலங்களவை சீட் இல்லை என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. வைகோவின் மாநிலங்களவைக்கான பதவிக்காலம் முடிவுக்கு வந்ததும் அந்த இடத்தை கமலஹாசனுக்குக் கொடுத்தது திமுக. வைகோவுடைய மகன் துரை வையாபுரியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் காரணமாகச் சொல்லிச் சமாதானம் செய்தது திமுக.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற பன்னிரண்டு தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம், எட்டுத் தொகுதிகளிலாவது வெல்வோம் என்றனர் மதிமுகவினர். ஆனால் கடந்த தேர்தலில் பெற்ற ஆறு இடங்களுக்கும் தேமுதிகவின் வருகையால் ஆபத்து நேர்ந்திருக்கிறது. இறுதியாக நான்கு தொகுதிகளைக் கொடுத்திருக்கிறது திமுக. அவற்றில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும். ஒரு தொகுதியில் மட்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள். இதுதான் இன்றைய மதிமுகவின் நிலை. ஒரே ஒரு தொகுதிக்காகவா வைகோ மதிமுக என்னும் கட்சியை நடத்துகிறார் என்று கேட்டால், இன்றைய நிலைமைக்கு ஆம் என்பது மட்டும்தான் பதிலாக இருக்க முடியும்.
மாணவப் பருவத்திலேயே பெரியார் மற்றும் அண்ணாவின் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் வைகோ. இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்டவர்களில் திமுகவினர் ஏராளமானோர் இருந்தனர். அவர்களுள் ஒருவராக மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் வைகோ. இந்திரா காந்தி தமிழகத்துக்கு வந்தபோது கறுப்புக்கொடி காட்டி சிறைக்குச் சென்றவர். கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பல்லாண்டு காலம் திமுகவில் செயல்பட்டவர்.















Add Comment