120. வாடை
வரமெனும் கருத்துருவாக்கம் எனக்கு அவ்வளவாக விளங்கவில்லை. ஒன்றைக் கேட்டுப் பெறுவது என்பது வரை குழப்பமில்லை. முறைப்படி கேட்பவனுக்குத் தருவது என்பதும் சிக்கலற்றது. ஆனால் அதை நேரில் சென்றுதான் செய்ய வேண்டுமென்பது யார் விதித்ததாக இருக்கும்? நான் புராணங்களையோ, அவற்றில் வருகிற கதைகளையோ பொருட்படுத்தப் போவதில்லை. அவை உண்மைக்கு நெருக்கமற்றவை. தவிர, தம் நோக்கத்தின் தன்மைக்கேற்பக் கதைகளைக் கட்டமைத்துக்கொள்ளும் சுதந்தரம் அவற்றுக்கு உண்டு. எண்ணிப் பார்க்கிறேன். கற்பனைக்கும் எட்டாக் காலம்தொட்டு ஆதிப் பெருந்தனிமம் நிலமெல்லாம் பரவி வசிக்கும் உயிரினங்களுக்கு வரமளித்துக்கொண்டேதான் இருக்கிறது. வளியாகவும் ஒளியாகவும் சலமாகவும் வளமாகவும் இன்னும் பலப்பல வடிவங்களில் ஓயாது சொரிந்துகொண்டேதான் இருக்கிறது. நானறிந்த வரமென்பது அத்தகையது மட்டுமே. அதனையன்றி வேறெதையும் வரமெனக் கருதவும் என்னால் கூடவில்லை.
ஆனாலுமென்ன. மனித குலத்துக்கு அதுவும் எதுவும் போதுமானதாக இருப்பதில்லை. வாழ்வெனும் பெருந்தவம் போதுமென ஆதித் தனிமம் நினைக்கிறது. வருத்திக்கொண்டு எதையாவது செய்யென்று சிறு தெய்வங்கள் கேட்கின்றன. வேட்டன் தெய்வமல்ல. சார்வாகன் தவமிருப்பதும் வரம் கேட்டுப் பெறுவதற்கல்ல. அவன் எதற்காகத் தன்னைக் கருதித் தவமிருக்கிறான் என்பதை வேட்டன் அறிய மாட்டான். என்ன வேண்டுமென்று அவன் தோன்றிக் கேட்கும்போது, என்னைக் கொண்டு என்ன செய்ய உத்தேசமென்று கேட்கத்தான் சார்வாகன் திட்டமிட்டிருக்கிறான். ஆனால் வேட்டனால் எப்போதுமே சித்தர் அருகே இருக்கும் சார்வாகனின் முன்னால் தோன்ற முடியப் போவதில்லை. இதை அவனும் அறிய மாட்டான்.
வினோதமென்றும் விசித்திரமென்றும் இதுநாள் வரை சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது எனக்கே இது சலிப்பூட்டத் தொடங்கியிருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு காற்றில் வாள் வீசும் அபத்தக் களியாட்டு. யார் ஆடுகிறார்கள் என்பதுதான் இதில் மீதமுள்ள ரகசியம்.











Add Comment