13. நீராடல்
வீதி நிசப்தமாக இருந்தது. குடந்தை நகரமெங்கும் நீக்கமற நிறைந்திருந்த ஞமலிகளும் மூலைக்குச் சிலவென ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன. இரவுப் பொழுதுகளில் உறக்கமற்றுத் திரியும் வராகங்கள் மட்டும் மேய்வதும் மெல்ல உறுமுவதும் நினைத்துக்கொண்டாற்போல வீதியின் ஒரு புறத்தில் இருந்து மறு புறத்துக்கு ஓடுவதுமாக இருந்தன. அள்ளியப் பணி*யில் இருந்த யாமிகர்* அனைவரும் அன்ன சத்திரங்களின் வெளித் திண்ணைகளில் கால் நீட்டிப் படுத்துவிட்டிருந்ததை அவன் கண்டான். தென்பட்ட காட்சிகளைக் கண்ட இடத்திலேயே உதிர்த்தபடி விரைந்து நடந்தான்.
மீண்டும் மீண்டும் அது ஒன்றுதான் விளங்க மறுத்தது. ஒரு மனிதன் ஒரு காட்சியைக் காண்கிறான். அல்லது ஒரு செயலில் ஈடுபடுகிறான். செய்வதும் காண்பதும் அவன் சிந்தையில் பதிவதே அல்லவா இயற்கை? நினைவழிந்து போவதென்றாலும் நினைவாக முதலில் அது சேகரமாகிவிடத்தான் வேண்டும். அவன் தனக்குத் தொடர்பற்ற எதையுமே சிந்தையில் சேமித்துப் பகுப்பவனாக இல்லை. அப்படி ஒரு மனநிலை வாய்க்கப்பெற்றவன் ஆட்சியைக் குறித்தும் மன்னனைக் குறித்தும் மக்களின் நம்பிக்கைகள் சார்ந்தும் கசப்புணர்வை உருவாக்கிக்கொள்வது மட்டும் எப்படிச் சாத்தியமாகும்?










Add Comment