53. கொன்று கொள்
எப்போது சார்வாகனின் சிந்தைக்குள் முதல் முதலில் புகுந்தேனோ, அக்கணத்திலிருந்து அவனை அறிவேன். அவன் சராசரி மனிதன்தான். ஆயின், பெரும்பாலும் சிந்திப்பதில்லை. சிந்திக்காத தருணங்களில் அவனது மனம் ஒரு வெட்ட வெளியாக இருக்கும். முன்னர் சிந்தித்துச் சேமித்த எந்த விவரமும் அதில் இராது. இதைப் பலமுறை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன் எனினும் இப்போது மீண்டும் ஒருமுறை குறிப்பிடுவதற்குக் காரணம் உள்ளது. சாதாரணத் தருணங்கள் நாம் எதிர்பாராத புள்ளியில் திடுக்கிடச் செய்யும் விதத்தில் சரித்திரமாகிவிடும். அவன், அவனறியாத அசாதாரணங்களின் தரிப்பிடமாக இருந்தான். வேகமாகவும் தெளிவாகவும் சிந்தித்துக்கொண்டே இருந்தான். அவன் சிந்திக்கும் அனைத்தும் இப்போது அவனது மனத்தின் ஓரடுக்கில் சேகரமாகிக்கொண்டும் இருந்தன. மிகவும் இயல்பான, உலகப் பொதுவான இந்தச் சுழற்சி அவனளவில் இயல்பானதல்ல. குறைந்தபட்சம் நானறிந்த அளவில் அல்ல.
லிங்கமென்றால் உனக்கென்ன தெரியுமென்று கருவூர்ச் சித்தர் அமைதியாகத்தான் கேட்டார். அவனறிந்ததைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதன் பிறகு தேவையானதை அவனுக்குச் சொல்லலாம் என்று நினைத்திருக்கலாம். இப்போது அவனது சிந்தை ஒரு லிங்க ரூபத்தை ஏந்தி நிற்குமென எதிர்பார்த்தேன். சிவமற்ற வெளியில் வாழும் ஒருவன் லிங்கத்தை எவ்வாறு ஒரு பொருளாகக் கருதி நிற்கிறான் எனக் காணும் ஆவல் உண்டானது.
அவன் ஒரு நொடிப் பொழுது கண் மூடினான். ஆறு நொடிகள் அப்படியே இருந்தான். பிறகு கண்களைத் திறந்து புன்னகை செய்தான்.










Add Comment