137. விழித்திருந்தவன்
வீரர்கள் அவனை அடித்துத் துரத்தினார்கள். அவன் மீண்டும் நிசும்பசூதனியின் ஆலயத்து முன் வாசல் மண்டபத்தில் வந்து அமர்ந்தான். வீரர்கள் அவனைக் கட்டி இழுத்துச் சென்று தஞ்சப்புரிக்கு வெளியே தள்ளி, எச்சரித்துவிட்டு வந்தார்கள். அன்றிரவே அவன் திரும்பி வந்து சேர்ந்தான். மூன்றாம் முறை அவனை இழுத்துச் சென்று விசாரணைக்கு நிறுத்தினார்கள். சிறையில் அடைத்து வைக்கச் சொல்லித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவன் அறுபத்து மூன்று கிழமைகள் சிறையில் வசித்தான். அளித்ததை உண்டான். அமைதியாகத் தனக்குள் ஒடுங்கித் தன் சிந்தையை உற்று நோக்கியபடி இருந்தான். எழுப்பிச் சென்று எந்தப் பணியைக் கொடுத்துச் செய்யச் சொன்னாலும் செய்தான். உறக்கம் வந்தபோது உறங்கினான். உறக்கத்திலும் அவன் விழிப்புடன் இருந்ததைக் கண்டேன். தனது சிந்தையை அன்றி அவன் வேறெதையும் எண்ணவில்லை. அதன் இருப்பும் அதன் இயக்கமும். அதன் அசைவும் அதன் அசைவின்மையும். அது எண்ணிப் பார்க்கும் சங்கதிகள். அது எண்ணிப் பார்க்கும் விதம். அவன் மனிதர்களைக் கருதினான். அவர்களது எண்ண ஓட்டங்களின் வினோதங்களை எண்ணித் திளைத்தான். எதையும் நம்பி ஏற்பதற்கு அவர்கள் எவ்வாறெல்லாம் பழக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதைச் சிந்தித்தான். ஒரு நோக்கில் வியவரியாகவும் மறு நோக்கில் பூனையாகவும் உருமாறிக்கொள்ள முடிவது எளிய செயலல்ல. ஆனால் அதனினும் எளிது இன்னொன்றல்ல என்பதைப் போலப் பழக்கத்தில் ஆகிவிட்டிருந்த தன்மையை அவன் வியப்புடன் நோக்கினான். மனிதனால் ஆகாததொன்று இல்லை. மனிதனைப் போல ஆட்டிப்படைக்கப்படுவதும் இன்னொன்றில்லை. மனித குலத்தின் அத்தனை மேன்மைகளுக்கும் அத்தனைக் கீழ்மைகளுக்கும் அவனது சிந்தையொன்றே காரணமாயிருப்பதை அவன் பிரமிப்புடன் சிந்தித்தான். கீழ்மைகளிலிருந்து விடுதலை அடையச் செய்யவேண்டியவை என்னவென்று இடைவிடாது சிந்திக்கத் தொடங்கினான்.
கீழ்மைகள் துன்பங்களின் பக்க விளைவுகளென அவனுக்குத் தோன்றியது. துன்பங்கள் அவாவினின்று பிறக்கின்றன என்னும் கருத்தாக்கம் அவனுக்குச் சரியானதாகத் தென்படவில்லை. பசிக்கும்போது மிருகங்கள் வேட்டையாடுகின்றன. அது அவாவினால் உண்டாவதல்ல. தேவை உந்தித்தள்ளுகிறது. பசியடங்கிய மறுநொடி அவை அமைதியடைந்துவிடுகின்றன. கொன்றது பாவமென்றோ, தின்றது தேவையென்றோ அவை எண்ணுவதில்லை. கொன்றதும் தின்றதும் தன்னியல்பானவை.











Add Comment