உங்கள் காலை உணவில் ஒரு சிறிய பிளாஸ்டிக் துண்டு இருந்தால் என்ன செய்வீர்கள்? பதறிப்போய் அதைத் துப்புவீர்கள்தானே? துரதிர்ஷ்டவசமாக, நாம் தினமும் உண்ணும் மீன், குடிக்கும் தண்ணீர், ஏன்… நாம் சுவாசிக்கும் காற்றில் கூட கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என்பதை அறிவியல் மெய்ப்பித்துள்ளது. இது ஏதோ தற்செயலான விபத்து அல்ல. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் ‘மினமாட்டா’ (Minamata) கடற்கரையில் தொடங்கிய ஒரு தொடர்கதை, இன்று நவீன வடிவமெடுத்து நம்மைச் சூழ்ந்துள்ளது.
1950களின் தொடக்கத்தில், ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள அமைதியான கடற்கரை நகரமான மினமாட்டாவில் இயற்கைக்கு மாறான விசித்திரங்கள் நிகழத் தொடங்கின. முதலில் அங்குள்ள பூனைகளிடம் ஒரு வினோத மாற்றம் தென்பட்டது. வழக்கமாக அமைதியாக இருக்கும் பூனைகள், திடீரெனப் பித்து பிடித்தது போலச் சுற்றின. அவற்றின் உடல்கள் கட்டுப்பாடின்றி நடுங்கின. சில பூனைகள் வினோதமாகச் சத்தமிட்டு, நடனம் ஆடுவது போலத் துடித்தன.
உள்ளூர் மக்கள் இதைப் பார்த்து ‘நடனமாடும் பூனை நோய்’ (Dancing Cat Fever) என்று வேடிக்கையாக அழைத்தனர். ஆனால் அந்த வேடிக்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை. பித்துப் பிடித்த அந்தப் பூனைகள் நேராகக் கடற்கரைக்கு ஓடிச் சென்று, கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டன. அடுத்த சில மாதங்களில் மினமாட்டாவின் வீதிகளில் ஒரு பூனையைக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்தும் மர்மமான முறையில் மடிந்து போயின. விரைவில் காக்கைகள் வானத்திலிருந்து செத்து விழுந்தன, கடலோரத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இயற்கையின் சமநிலை குலைந்து கொண்டிருப்பதை அந்த நகரம் அப்போது உணரவில்லை.















Add Comment