50. வஞ்சி
இரவா பகலா என்று தெரியவில்லை. நிலமா சலமா வெளியாவெனத் தெரியவில்லை. உள்ளா புறமாவெனத் தெரியவில்லை. பெயல் இருந்தது. வெயிலுமிருந்தது. சார்வாகன் அதை உணரும்போதே இரண்டுமற்றுப் போனது. தாங்க இயலாத அளி தன்னைத் தாக்குவதை அவன் உணர்ந்தான். அக்கணமே அவனுக்கு வியர்க்கவும் செய்தது. இடமும் காலமும் காலநிலையும் திட்டமிட்டுப் புரட்டப்படுவது எனக்குப் புரிந்தது. என்ன முயன்றும் விளங்கிக்கொள்ள இயலாத வெளியில் கொண்டு நிறுத்தும் அளவுக்கு ஏதோ ஒன்றன் தீவிரத்தன்மை மறைமுகமாக உணர்த்தப்படுவதைக் கண்டுகொண்டேன். செய்யப்படுவதும் செய்வதும் யாரென்று தெரிய வேண்டியது மட்டுமே மீதமிருந்தது. அது புலப்படுவதற்குள் சார்வாகனின் சிரம் சிதறிவிடாதிருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.
அவன் மிகுந்த பறதியுற்றிருந்தான். தனது பகுத்தறியும் திறனுக்கு அப்பால் ஒன்று அல்லது ஒரு சில இயங்குவதை அவனால் ஏற்க இயலவில்லை. நினைவறிந்த நாளாகத் தனித்தே இருப்பவனின் சிந்தைக்குள் இத்தகைய மாயத் தோற்றங்கள் உருவாவது இயற்கையாக இருக்குமென்று முதலில் நினைத்தான். அல்லது இவை அனைத்துமே ஒரு பெருங்கனவின் அங்கங்களாக இருக்கக் கூடுமென்று நினைத்தான்.
ஆனால் வாழ்வில் முன்னெப்போதும் இத்தகைய கனவுகள் தனக்கு வந்ததில்லை. இத்தகைய கனவென்றில்லை. கனவு என்ற ஒன்றே வந்ததில்லை. உறக்கத்திலும் சரி, போதையில் இருக்கும்போதும் சரி. விழிப்பற்ற வெளியென்பது வெற்றிடமாகத்தான் இருந்திருக்கிறதே அன்றி வேறொன்றைக் கண்டதில்லை. அச்சமோ, கவலையோ, துக்கமோ, விரக்தியோ, வேதனையோ அங்கு விளைந்ததில்லை. அப்படியெல்லாம் உணர்ச்சிகள் உண்டென்று தெரியுமே அன்றி, உணர்ந்து அனுபவித்ததில்லை. ஆனால் இப்போது ஏன் இப்படியெல்லாம் ஆகிறது? கனவில்தான் நிகழ்கிறதென்றால் விழித்தெழுந்ததும் துடைத்தெறிந்துவிடலாம். கனவல்ல என்றால் அடுத்து என்ன செய்வது என்பதைத்தான் சிந்திக்க வேண்டும்.










Add Comment