58. பெரும்பூதம்
உடலத்தை ஓரிடத்தில் பொருத்தாமல் சிந்தையை ஒன்றன் மீது குவித்துத் தவம் புரிய இயலாது. மிதக்கும் நிலையில் அசைவுகள் இருக்கும். அலைக்கழிப்புகள் இருக்கும். அச்சில் சென்று பொருந்திக்கொள்ள அப்போது வழியிருக்காது. என்னை என்றல்ல. எதனைக் குறித்து யார் தவமிருந்தாலும் இதுதான் விதி. இப்படித்தான் இருந்தாக வேண்டும். ஏன் என்று கேட்பீர்களானால் என்னிடம் விடையில்லை. அது இயற்கையின் கட்டமைப்பு.
அவன் ஒரு சூலக் கோலின் மீது தன்னைப் பதுமத்தில் நிலைநிறுத்தியிருந்தான். பன்னெடுங்காலமாக அவன் இத்தவத்துக்குப் பயிற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். எப்போது அமர்ந்தான் என்று நானறியேன். ஆனால் என்னை அவன் நெருங்கப் பார்த்தபோது கவனத்தில் தென்பட்டான்.
உற்று நோக்குங்கள். அவன் என்பது இங்கே அவனது உடலத்தைக் குறிப்பது. தவம் இயற்றும் அவனது சிந்தை வேறெங்கோ உள்ளது. எப்படி என் பொருள் என்னிடத்தில் இல்லையோ அப்படி. ஆனால் ஒரு வேறுபாடு உண்டு. என் பொருள் என்னிடத்தே இல்லை என்பதை மட்டுமே நானறிவேன். அது வேறெங்கே உள்ளதென்பது என்னால் உணர்ந்தறிய இயலாதது. சொன்னேன் அல்லவா? அது பிரம்மத்தின் பிரத்தியேகம். இன்னொன்று அறிவதற்கில்லை. ஆனால் அவனுக்கு அந்தச் சிக்கலில்லை. தனது சிந்தையை எத்தனைக் கூறுகளாகவும் பகுத்து, பகுதிக்கொரு பணியைத் தர அவனால் முடிந்திருக்கிறது. அவ்வண்ணமே பகுத்த தனது மனத்தின் பகுதிகளை ஏந்தி நிற்க ஒரே தோற்றம் கொண்ட வெவ்வேறு உடலங்களையும் அவன் உற்பத்தி செய்திருக்கிறான். ஒரு விதத்தில், இது தனக்குள் இருந்து தனது பிரதியுருவைப் பிறப்பிக்கும் தாய்மையின் தன்மை நிகர்த்தது. வேறொரு வகையில் இதனை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருந்தது.










Add Comment