கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் ஜூலை 21ஆம் தேதி 101ஆவது வயதில் இயற்கை எய்தினார். கம்யூனிஸ்ட் கட்சியில். ஆரம்பநிலை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத். தொடங்கிய வி.எஸ்., பிற்காலத்தில் கேரள மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவராக எண்பது ஆண்டுகள் பொதுப் பணியாற்றினார்.
‘காம்ரேட் வி.எஸ்’ என்று அழைக்கப்படும் வி.எஸ்.அச்சுதானந்தன், 1923ஆம் ஆண்டு கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள புன்னப்புரா என்னும் கிராமத்தில் பிறந்தார். தனது நான்காம் வயதில் தாயை இழந்தவர். பதினோராவது வயதில் அச்சுதானந்தனின் தந்தையும் இறந்து போகிறார். தனது மூத்த அண்ணன் கங்காதரனின் அரவணைப்பில் வளர்ந்த வி.எஸ்., தனது பன்னிரண்டாவது வயதில் கயிறுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிக்குச் சேர்கிறார்.
அங்கு உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறார். தொழிற்சங்கத்தில் இணைந்து பல்வேறு இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். 1939ஆம் ஆண்டு தனது பதினேழாவது வயதில் திருவிதாங்கூர் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டே காங்கிரசிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கிருஷ்ணபிள்ளையின் வழிகாட்டுதலின் படி ஆலப்புழாவிலுள்ள குட்டநாடு கிராமத்தில் தனது கட்சிப் பணியைத் தொடங்குகிறார்.















Add Comment