21. உறைக்குள் கத்திச் சண்டை
திலகரும் ஆகர்கரும் மிக நெருங்கிய நண்பர்கள், இளம் வயதிலிருந்தே இந்தியாவின் எதிர்காலத்தைப்பற்றிப் பலவிதமாகக் கனவு கண்டவர்கள், அதை வெறும் கனவாக நிறுத்திவிடாமல் செயலில் காட்டிப் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர்கள், சிறந்த இதழாளர்கள், கல்வியாளர்கள், ஏராளமான இளைஞர்களை வழிநடத்தியவர்கள், இந்தியத் தாயின் பெருமைக்குரிய மகன்கள்.
ஆனால், இந்த ஒற்றுமைகளையெல்லாம் தாண்டி, அவர்களுக்குள் சில முதன்மையான கருத்து வேறுபாடுகளும் இருந்தன. தொலைவிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அந்த முரண்கள் தென்படாது. சற்று நெருங்கியதும் அவை மிகப் பெரிதாகத் தெரியத் தொடங்கும்.
தன்னுடைய கல்லூரிக் காலத்தில் திலகரையும் ஆகர்கரையும் அண்ணாந்து பார்த்து வியந்துகொண்டிருந்த கோகலே பின்னர் அவர்களை நெருங்கி, அவர்களுடன் பணிபுரியத் தொடங்கியதும் இப்படித்தான் உணர்ந்தார். ‘திலகரையும் ஆகர்கரையும்போல் சேவை செய்யவேண்டும்’ என்று நினைத்துக்கொண்டிருந்தவர், ‘திலகரைப் பின்பற்றுவதா அல்லது ஆகர்கரைப் பின்பற்றுவதா’ என்கிற கேள்விக்குப் பதிலளிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதாவது, அவர்கள் இருவரில் ஒருவரைப் பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும், இருவரையும் பின்பற்ற முயன்றால் ஒரே வண்டியை இரண்டு மாடுகள் வெவ்வேறு திசைகளில் இழுப்பதைப்போலாகிவிடும் என்று அவர் உணர்ந்தார்.










Add Comment