23. பூனாவின் முடிசூடா மன்னர்
கோகலே 1884ம் ஆண்டின் முடிவில் கல்லூரிப் படிப்பை முடிக்கிறார், 1885 ஜனவரியில் நியூ இங்கிலீஷ் ஸ்கூலில் ஆசிரியராகச் சேர்கிறார், 1886 ஜூன் மாதம் டெக்கன் கல்விக் கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராகச் சேர்கிறார். அப்போது அவருக்கு வயது இருபதுதான். படிப்பைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. சுற்றியிருக்கிற பெரிய மனிதர்களைப் பார்த்து, கேட்டு மெதுவாக உலகத்தைக் கற்றுக்கொள்கிற இளைஞர்.
ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் திலகரைப் போன்ற ஒரு பெரிய தலைவருக்குச் சிடுசிடுப்பை (குறைந்தபட்சம் குறுகுறுப்பையாவது) உண்டாக்குகிற அளவுக்குக் கோகலே வளர்ந்துவிட்டார். பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் மாணவர்களுக்கு நடுவில்மட்டும் பேசிக்கொண்டிருந்தவருடைய குரலும் எழுத்தும் இப்போது பல மன்றங்களில், பல மேடைகளில் கேட்கப்பட்டது, படிக்கப்பட்டது. ஊரில் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்கு மக்கள் விரும்பினார்கள். அரசியல் கூட்டங்கள், மாநாடுகளிலெல்லாம் கோகலேவின் பங்களிப்பு நன்றாகத் தெரிந்தது.
ஒருவேளை, கோகலே பத்தோடு பதினொன்றான ஆசிரியராகமட்டும் இருந்திருந்தால், அவர் தன்னுடன் நிற்காமல் ஆகர்கரின் பக்கம் சென்றது திலகருக்கு எரிச்சலூட்டியிருக்காது. அவர் பொருட்படுத்தக்கூடிய இளம் தலைவராக வளர்ந்துகொண்டிருக்கிறார் என்பதால்தான் அவருடைய நடவடிக்கைகளைத் திலகர் (மறைமுகமாகக்) கண்டித்துப் பேசலானார், ‘சிலர் தனிப்பட்ட நன்மைகள், வளர்ச்சிக்கான முதல் படிக்கல்லாக டெக்கன் கல்விக் கழகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்’ என்றெல்லாம் குற்றம் சாட்டலானார்.










Add Comment