கடந்த மாத இறுதியில் ‘ஆஸ்திரேலியாவுக்காக அணிவகுப்பு’ (March for. Australia) என்ற பெயரில் குடியேற்றத்தை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் பிரசாரம் பெரும்பாலும் இந்தியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இந்தியர்கள் அதிகமாகக் குடியேறுவது ஆஸ்திரேலிய மக்களின் வேலைவாய்ப்பு, வீட்டு வாடகை, மற்ற அடிப்படைத் தேவைகளில் பாதிப்பை ஏற்படுகின்றன என்று பேரணியில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
‘ஆஸ்திரேலியாவில் கடந்த நூறு வருடங்களில் குடியேறிய இத்தாலியர்கள், கிரேக்கர்களின் எண்ணிக்கையை விடக் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியர்கள் அதிகமாகக் குடியேறியுள்ளனர். இந்தப் பெரும் குடியேற்றம் எங்கள் சமூக அமைப்பையே மாற்றுகிறது. ஆஸ்திரேலிய நாட்டின் பண்பாட்டு அமைப்பை இந்தியர்கள் மாற்றுகிறார்கள்’ போன்ற கோஷங்கள் இப்போராட்டத்தின் வாதங்களாக முன்வைக்கப்பட்டன.
இனவாதத்தை எதிர்க்கும் ஆஸ்திரேலியாவின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகளும் வலதுசாரி இனவாதக் குழுக்களும் ஏற்பாடு செய்திருந்தன. ‘ஆஸ்திரேலியாவில் குறிப்பிட்ட சில துறைகளில் தொழிலாளர்களாகப் பிறநாட்டினர் அதிகம் பணியாற்றுகிறார்கள். ஆனால் மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, வணிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் உள்ளனர். இது ஆஸ்திரேலியர்களுக்குப் பாதுகாப்பின்மை உணர்வைத் தருகிறது. எதிர்க்கட்சிகளும் வலதுசாரிகளும் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஒரு தவறான புரிதல். ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்’ என்கிறார் கல்டார் சர்வதேச அகதிகள் சட்ட மையத்தைச் சேர்ந்த நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேன் மெக்காடம்.















Add Comment