முன்பு எப்போதும் இல்லாத.அளவுக்குத் தற்போது உலகம் பெண்களைப் புகழ்கிறது. சகலகலாவல்லிகள் என்று கொண்டாடுகிறது. சிங்கப் பெண்ணே பாடல் அவ்வப்போது உங்கள் காதுகளிலும் எதிரொலிக்கிறதுதானே? வேலையில் திறமையாக இருக்கிறாள். வீட்டை நேர்த்தியாக வைக்கிறாள். குழந்தைகளை அன்பாக வளர்க்கிறாள். உறவுகளைக் கவனமாகப் பராமரிக்கிறாள். நண்பர்களுக்குத் தோள்கொடுத்து நிற்கிறாள். சமூக ஊடகத்தில் புன்னகையுடன் வலம் வருகிறாள். அலுவலகத்தில் தன்னம்பிக்கையுடன் நடக்கிறாள். இப்படியாக எல்லாமே மிகச் சரியாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.
ஆனால் அந்தப் புன்னகைக்குப் பின்னால் ஒரு களைத்த மனம் இருக்கிறது என்பதை யாரும் பார்ப்பதில்லை. அந்தத் தன்னம்பிக்கையான நடைக்குப் பின்னால் ஒரு தளர்ந்த உடல் ஒளிந்திருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை . பெண்கள் சுமக்கும் சுமையின் எடை என்னவென்று யாரும் அறிவதில்லை. ஏனென்றால் அந்தச் சுமை பெரும்பாலும் கண்களுக்குத் தெரிவதில்லை.
ஒன்று முடியும் முன்பே காத்திருக்கும் அடுத்தடுத்த வேலைகளால் பரபரப்புடன் சுழல்கிறது வேகமான உலகம். குடும்பத்தையும் தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் இயங்க வைக்கத் தேவையான திட்டமிடல், கவலை, நினைவில் வைத்திருத்தல், உணர்வு நிர்வகிப்பு இவை எல்லாம் சேர்ந்ததுதான் மனச்சுமை. இதை யாரும் பார்ப்பதில்லை, யாரும் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இது ஒரு பெண்ணின் மனதை, உடலை, வாழ்க்கையைத் தினமும் அரித்துக்கொண்டே இருக்கிறது. பெண்ணாலும் கூட வரையறுக்க முடியாத, விளக்கிச் சொல்ல இயலாத அந்தச் சுமை அவளுக்கு மறைமுகமான வலியை ஏற்படுத்தித் தளர்ந்து போகச் செய்கிறது.















Add Comment