உல்லாசபுரி
நீலமலைகள் கண்டறியப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அது வெள்ளையர்களுக்கும், அப்போதைய ராஜாக்களுக்கும், பெருவசதி கொண்ட செல்வந்தர்களுக்குமான மலையாகவே இருந்தது. நடுத்தர மக்களும் ஏழைகளும் அதுவரை சுற்றுலா என்ற வசதிக் கோட்பாட்டுக்குள் நுழையாத காலம் அது. அவர்களுக்கு ஆற்றங்கரைகளும், கோவில் குளங்களும், சினிமா தியேட்டர்களுமே சுற்றுலாத் தலங்களாக அமைந்திருந்தன.
சுதந்தரத்திற்குப் பிறகும் கூட இந்த நிலை அப்படியேதான் நீடித்தது. முதன்முறையாகப் பணி சார்ந்து மலையேறியவர்களுக்குக் கூட அந்தச் சீதோஷ்ணம் அதிருப்தியையே தந்தது. ஓரிரு நாள்கள் குளிரை அனுபவிப்பது என்றால் பரவாயில்லை. வருடம் முழுவதும் அதைப் பொறுத்துக்கொள்வது இயலாததாக இருந்தது. நீர் மின் திட்டங்கள் உருவாகி வளர்ந்தபோது தமிழக அரசு ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும் இந்தக் கால நிலைக் குழப்பமே ஒரு காரணமாயிருந்தது. ஆகவே உள்ளூரிலிருந்தும் அண்டை மாநில எல்லைகளிலிருந்துமே பணியாளர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் போகப்போக இந்த நிலை மாறியது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பணி சார்ந்து மலையேறி வந்த மக்கள்தான் இந்த மலையின் சுகந்தத்தை, இது கொடுக்கும் அமைதியை மெல்ல மெல்ல உணரத்தொடங்கியிருந்தார்கள்.















Add Comment