49 கனவு
நேற்று காடு இன்று நகரம். நேற்று டெண்ட்டு தங்கல் இன்று பெரிய கட்டடம். இப்படியே இரவும் பகலும் போல மாறி மாறி காஷ்மீர் வரை வந்துகொண்டேயிருக்குமோ என அண்ணாந்து அந்த சாம்பல் நிறக் கட்டத்தைப் பார்த்தபடி லாரியிலிருந்து டிரைவர் கொடுத்த சைக்கிளை அனாயாசமாக வாங்கி பாரை வலது தோளில் வைத்துக்கொண்டபடி சைக்கிள் நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.
படிக்கட்டில் அமர்ந்திருந்த பெண்கள், குறிப்பாக ம்ருனாள் குல்கர்னி தன்னையே பார்ப்பது கண்ணோரம் தெரிய, வியப்பாகவும் குஷியாகவும் இருந்ததில் தோள்கள் தானாக உயர்ந்துகொண்டன. அவள் அப்படியொன்றும் அழகியுமில்லை அவள் மீது இவனுக்கு எந்த ஈர்ப்பும் இருந்ததுமில்லை. அவனுக்கு இருந்ததெல்லாம் யாராக இருந்தாலும் எப்படித் தன்னிடம் ஒருத்தி முகத்தைத்தைத் திருப்பிக்கொள்ளப்போயிற்று என்கிற ஆற்றாமைதான். தன்னால் அலட்சியப்படுத்தப்பட்டவராகவே இருந்தாலும் எப்படி ஒருவர் தன்னை அலட்சியப்படுத்தப் போயிற்று என்கிற குழந்தைத்தனமான, தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட அசட்டுத்தனம்தான் அவன் மனத்தில் இருந்தது. இடதுகை தொட்டிலில் கிடப்பதால் வந்த பரிதாபமாக இருக்கலாம் என்று மின்னலாய் எழுந்த எண்ணத்தை, முடிந்த சிகரெட்டாக அழுத்தி மிதித்துக் கலைத்துக்கொண்டான்.
சைக்கிளை விட்டதும் நேராக வந்து ம்ருனாள் உட்கார்ந்திருந்த பக்கத்துக்கு எதிர்புறம் அமர்ந்துகொண்டான்.















Add Comment