டெல்லி பூத்காலான் பகுதியைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி சாவி ஷர்மா, தெருநாய்களால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தீவிரமான பொதுநலப் பிரச்சினையாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து அவ்வழக்கை விசாரித்தது. விசாரணையின் இறுதியில், எட்டு வார காலத்துக்குள் அனைத்துத் தெருநாய்களுக்கும் கருத்தடை ஊசி போட்டு, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிரத்தியேகக் காப்பகங்களுக்கு மாற்றப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. ‘ஒருநாள் காலையில் சைக்கிள் ஓட்டிப் பாருங்கள், தெருநாய்களின் அச்சுறுத்தலை உணர முடியும்’ என்ற நீதிபதியின் குறிப்பு, இந்தச் சிக்கலின் தீவிரத்தைக் காட்டியது.
ஒருபக்கம் டெல்லி மக்களிடம் இந்தத் தீர்ப்புக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, சிறுமி சாவி ஷர்மாவின் பெற்றோர் தங்கள் மகள் மரணத்திற்கு நீதி கிடைத்துவிட்டதாகக் குறிப்பிட்டனர். மறுபக்கம் இந்த உத்தரவு விலங்குகள் நல ஆர்வலர்களின் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அவர்களில் பலர் வீதிகளில் இறங்கினர். கன்னாட் பிளேஸ், இந்தியா கேட் பகுதிகளில் ஊர்வலங்கள் நடத்தினர். வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தற்போது நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான மூன்று பேர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் 40,000 ஆண்டுகால உறவு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதர்கள் வேட்டையாடிகளாக வாழ்ந்த காலத்தில், மனித முகாம்களுக்கு அருகில் உணவுக்காகச் சுற்றித்திரிந்த சாம்பல் ஓநாய்களுக்கு எஞ்சிய உணவை வழங்கியதுதான் இந்த உறவின் தொடக்கம். காலப்போக்கில் இந்தச் சாம்பல் ஓநாய்கள் மனிதர்களுடன் அச்சமின்றிப் பழகவும், அவர்களின் வேட்டைகளில் உதவவும் தொடங்கின. மனிதர்களுடனான பழக்கம் அவற்றின் நடத்தை மற்றும் உடலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது நாய்களின் தோற்றத்திற்கு வழிவகுத்ததாகக் குறிப்பிடுகிறார்கள். நாய்களுக்கும் சாம்பல் ஓநாய்களுக்கும் இடையேயான மரபணு ஒற்றுமையை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.















Add Comment