33. கரும் புகை
அத்துடன் அன்று அவன் புறப்பட்டுச் சென்றிருந்தால் உதுமானி நாயனார் அவனைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார். காலம்தோறும் அரசுகள் மாறுகின்றன. காலம்தோறும் மன்னர்கள் மாறுகிறார்கள். நெறிகள், விதிகள், சட்டங்கள், நியாயங்கள் எல்லாம் எப்போதும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. மாறாத தர்மம் என்றும் உள்ளது. யாரும் அதை மறுப்பதில்லை. யாரும் அதை நிராகரிப்பதில்லை. ஆனால் நியாயங்களுக்கு வாய்க்கும் முக்கியத்துவம் தர்மங்களுக்கு அமைவதில்லை. முடைப்படு தருணங்களில் மறப்பதற்கு வாகாக அதுவே முன் நிற்கிறது. எல்லா ஆட்சிகளும் தத்தமது பகைவர்களைத் தன்னகத்தில் கொண்டே அமைகின்றன. நிறைவு காணாத நெஞ்சங்களில் பகை உருவாகிறது. எதுவும் புதிதல்ல. எப்போதும் இருப்பதுதான்.
அவன் சோழனை வெறுக்கிறான் என்றால், அது அவன் சித்தம். குடியிலொருவனுக்குக் குற்றம் சொல்லவுமா அருகதையற்றுப் போய்விடும்? பிழையே இல்லை.
நாயனார் அவனது சிந்தையின் நேர்மையையும் சொற்களின் கூர்மையையும் மிகவும் ரசித்தார். அவன் உள்ளொன்றும் புறத்தொன்றுமாக இல்லை. நினைத்ததைச் சொன்னான். அச்சத்தின் சாயையும் அவனது சித்தத்தில் இல்லை என்பதை அவர் கண்டுகொண்டார். அன்று கானகத்தில் வயவரியுடன் சண்டையிட்டபோது வெளிப்பட்ட மூர்க்கம் அவன் பிறப்புடன் வந்திருக்குமென்று நினைத்தார். ஓர் அதிமனிதனாக அவனைக் கருதியிருக்கத் தேவையில்லை என்பதே அப்போது அவரது முடிபாக இருந்தது.










Add Comment