178. தீரேந்திர பிரம்மச்சாரி
உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவருக்கும் சஞ்சய் காந்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஆட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் பணி தரப்பட்டது. அப்படித் திரட்டி வரப்படும் ஆட்களில் சிலருக்கு நேருவின் பேரனை, இந்திரா காந்தியின் பிள்ளையைப் பார்க்கும் ஆர்வம் இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்குக் காசு தரப்பட்டது.
ஆம்! ஊரிலிருந்து அவர்களை லாரியிலோ டிராக்டரிலோ ஏற்றுவதற்கு முன்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபாய் நோட்டு ஒன்றும், ஐம்பது பைசா நாணயம் ஒன்றும் தரப்பட்டது. ஆக, ஒரு ஆளுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்றரை ரூபாய்.
இன்றைய விலைவாசியில் ஒன்றரை ரூபாய்க்கு ஒன்றும் கிடைக்காது. ஆனால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அதற்கும் ஏழை மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கவே செய்தது!
இந்த ஒன்றரை ரூபாய் கூட்டம் தவிர மூன்று ரூபாய்க்கு இன்னொரு வகையினரும் திரட்டப்பட்டனர். அவர்கள் உபரியாக, ‘சஞ்சய் காந்தி வாழ்க! தேசத்தலைவர் சஞ்சய் காந்தி!’ என்றெல்லாம் கோஷம் போட வேண்டும்.















Add Comment