20. லார்ட் லஷிங்க்டன் காலம்
மன்றோ நீலகிரியிலிருந்து அவர் மனைவிக்கு எழுதிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதத்தில், அடுத்த முறை நீலகிரிக்கு வரும்போது இணையாகச் சேர்ந்து வரவேண்டும் என்று தன் விருப்பத்தைக் குறிப்பிட்டிருப்பார். ஆனால் விதியின் நோக்கம் வேறுவிதமாக இருந்தது. அதற்கடுத்த வருடமே (1827 ஜூலை) அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவர் மரணம் மதராஸ் மாகாணத்துக்கு மட்டுமல்லாமல், பெரும் வளர்ச்சி ஒன்றை எதிர்பார்த்திருந்த நீலமலைக்கும் வொட்டகமண்டுக்குமே பேரிடியாக அமைந்தது. ஆனால் இயற்கைக்கு வேறு திட்டங்கள் இருந்தன.
மன்றோவுக்குப் பிறகு மதராஸ் ஆளுநராகப் பொறுப்பேற்ற லார்ட் லஷிங்க்டன் (Lord Lushington) நீலமலை தொடர்பான விஷயங்களை மன்றோவை விட, சல்லிவனை விடத் தீவிரமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தார். நீலகிரி என்ற சொல் இவர் காலத்தில்தான் மேலெழுந்து வந்தது. ஆவணங்களில் நீலகிரி மலைகள் (Neilgherry Hills) என்று தோடர்களிலிருந்து கடன்வாங்கிய வார்த்தைகள் கொச்சையாக உபயோகிக்கப்பட்டன. இன்றுவரை ஆவணங்களில் அப்படித்தான் இருக்கின்றன.
வொட்டகமண்ட் போலவே மொத்த நீலகிரி மலைகளையும் வாழ்விடமாகவும், வளர்ச்சிக்கான மையமாகவும் மாற்றவேண்டும் என்ற தாரக மந்திரம் லஷிங்க்டனால் ஓதி வளர்க்கப்பட்டது. சல்லிவன் அவரது நோக்கத்தைப் புரிந்துகொண்டார். இருவரும் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். அடுத்த எட்டு வருடங்கள் நீலமலை அத்தியாயத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய தருணங்களென ஆயின.















Add Comment