58 மறுப்பும் இருப்பும்
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருந்தவளை இரண்டு மூன்று பெண்கள் கைதாங்கலாக அணைத்தபடி அழைத்துச் சென்றபின், என்ன ஆயிற்று, சுஜாதா ஏன் இந்த அளவுக்கு அழவேண்டும் என்கிற குறுகுறுப்பில் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மாடிக்குப் போனான்.
மதியம் பார்த்த அதே மாடிதான். ஆளரவமற்று அமைதியாக இருந்தது. அப்போதிருந்த புறாக்களின் புடுபுடு முனகல் இப்போது இல்லை. இறக்கைகள் அங்குமிங்குமாகக் கிடந்தன. புழுதி படிந்த மாடியில் ஓரிடம் கறுப்பாகத் தீய்ந்திருந்தது. காலாலோ கையாலோ தேய்க்கப்பட்டது போல் கரித் தீற்றலாக இருக்க, எரிந்து எரியாமலிருந்த மரக்கட்டைகள் சுவரோரம் கிடந்தன. அங்கு என்ன நடந்திருக்கிறதென்று முதலில் இவனுக்குப் பிடிபடவில்லை. பிய்ந்து கிடக்கிற இறகுகள் வெள்ளையும் சாம்பலும் கலந்திருப்பதை வைத்து அவை புறா இறக்கைகளாக இருக்கவேண்டும் எனத் தோன்றியது. புறாவைப் பிடித்து யாரோ சுட்டுத் தின்றிருக்கிறார்கள் எனத் தோன்றியதும் ஒரு நொடி வயிற்றைக் கலக்கிற்று.















Add Comment