ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 22ஆம் தேதியை நிறுவன நாளாக (founding day) சவுதி அரேபிய அரசு கொண்டாடுகிறது. இது கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு முதல் சவுதி அரசு உருவான நாளின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. நிறுவன நாள் என்பது சவுதி அரேபியாவின் வரலாற்றுப் பெருமை, தேசிய ஒற்றுமை, கலாசாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு சிறப்பான தேசிய நாளாகும்.
ஹிஜ்ரி 1139/கிபி 1727ஆம் ஆண்டில் இமாம் முஹம்மத் பின் சவுத் என்பவரால் முதல் சவுதி அரசு நிறுவப்பட்டது. அவர் இன்றைய தலைநகர் ரியாத்துக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான திரியாவில் முதல் சவுதி அரசை நிறுவினார். அப்போது அமெரிக்கா என்னும் நாடு பிறந்திருக்கவில்லை. இந்தியாவில் மராட்டியர்கள் வலிமையாக இருந்த காலம். ஐரோப்பாவில் பேரரசுகள் ஒன்றை ஒன்று விழுங்கிக் கொண்டிருந்த காலம். அக்காலத்தில் அரேபியப் பாலைவனத்தின் நடுவில் திரியா எனும் சிறுநகரில் உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்திகளில் ஒன்றான சவுதி அரேபியா பிறந்தது.
ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பனூ ஹனீஃபா பழங்குடியினர் அரேபிய தீபகற்பத்தின் மையப் பகுதியில் குடியேறினர். அவர்கள் நஜ்த் என்னும் பாலைவனப் பகுதியில் வாடி ஹனிஃபா எனும் பள்ளத்தாக்கில் ஒரு சிறு நகரை உருவாக்கினர். அதுவே அல் யமாமா அரசு.















Add Comment