ஜிம்பாப்வேயின் வனவிலங்குகளுக்கான தேசியப் பூங்கா ஒன்றின் ஆழமான உட்பகுதி அது. மக்கள் தொடர்பில்லாதது. ரம்மியமான அதிகாலை நேரம். உணவைத் தேடும்பொருட்டு ஊர்ந்துகொண்டிருந்தது அந்த யானைக் கூட்டம். அக்கூட்டத்தில் பதினைந்து யானைகள் இருந்தன. தலைவிக்கு வயது ஐம்பது. பெண் யானைகளும், ஆறிலிருந்து பன்னிரண்டு வயது வரையுள்ள இளம் யானைகளும் அக்கூட்டத்தில் இருந்தன. அப்போது, எங்கிருந்தோ சீறிவந்த தோட்டாக்களால் காட்டின் அமைதி குலைந்தது.
யானைகள் பயத்தோடும் கோபத்தோடும் பிளிறியபடி அங்குமிங்கும் ஓடின. துப்பாக்கியுடன் வந்தவர்கள் முதலில் குறிவைத்தது இளம் யானைகளுக்குத்தான். தாய் யானைகளின் கண்முன்னாலேயே கன்றுகள் கொல்லப்பட்டன. கன்றுகளின் முன் தாய் கொல்லப்படுவதைவிட இது மேலானது என அவர்கள் நினைத்தனர். அந்த அளவுக்குக் கருணையோடு நடந்துகொண்டனர் என்று சொல்லலாம்.
கொஞ்ச நேரத்தில் அந்த யானைக் கூட்டம் அடியோடு அழிக்கப்பட்டது. ஒரு யானையை விட்டுவிட்டாலும் அது அதிர்ச்சியால் வருந்தும். மற்ற யானைக் கூட்டங்கள் அதைச் சேர்த்துக்கொள்ளுமா எனத் தெரியாது. எனவே, ஒரு கூட்டத்தில் மொத்த யானைகளையும் அழிக்கவேண்டியது அவர்களுக்குக் கட்டாயமாக இருந்தது. தயாராக இருந்த சிலர் யானைகளை வெட்டிக் கூறுபோட ஆயத்தங்கள் செய்தனர். தேவையுள்ள மக்களுக்கு அவை உணவுக்காகப் பிரித்தளிக்கப்படவேண்டி இருந்தது.















Add Comment