நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத் தோன்றியதைச் செய்கிறாய்.
ஏய்த்துத் தகர்க்கத் தெரிந்தவன் கோயில்களைக் கட்டுகிறான். ஏமாந்து அடிமைப்பட்டுக் கிடக்க மட்டுமே முடிந்தவர்கள் தொழுது கிடக்கிறார்கள் என்று அவன் நினைத்தான்.
நீலக்கிளி, கொத்தாத நெல் ஒன்றன் அருகே சென்று கிக்கீ என்றது. அவன் அச்சத்தத்தைக் கேட்டான். கிளியின் குரலுக்கு, இப்போது வேண்டாம் என்று நெல்லுக்குள் இருந்து ஒலித்த பதிலை நான் மட்டுமே கேட்டேன்.
அவனைக் கோழை என்று எண்ண முடியவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தோன்றியது. ஏனெனில் அவன் வாய் திறந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் திடமாக இருந்தது.