உலக வரைபடத்தில் ஒரு சிறிய துண்டு நிலம். நீளம் நாற்பத்தொரு கிலோமீட்டர், அகலம் வெறும் பத்து கிலோமீட்டர். இந்தச் சிறிய நிலப்பரப்பில் இருபத்து மூன்று லட்சத்துக்கும் அதிகமான மனிதர்கள் வாழ்கின்றனர். உலகம் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கும் பேரழிவின் அவலநிலையில் நின்று கொண்டிருக்கிறது பாலஸ்தீனத்தின் காஸா எனும் பாவப்பட்ட நிலப்பகுதி.
போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 2025ஆம் ஆண்டு இறுதிவரை குறைந்தது 18,592 குழந்தைகளும், சுமார் 12,400 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 71,660 பேர் உயிரிழந்துள்ளனர். போரை முழுமையாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் பலமுறை வெறும் பேச்சுக்களாக மட்டும் காற்றில் கலந்திருக்கின்றன. காஸாவின் பொருளாதாரம் அடித்தளத்திலிருந்தே சிதைந்துள்ளது. உள்கட்டமைப்பு மீண்டு வர இயலாதவாறு சிதிலமடைந்துள்ளது.
முகநூலில் வந்த ஒரு காணொளியில், காஸா இளைஞர் ஒருவர் தன் வீட்டின் இடிபாடுகளில் இருந்து கைப்பிடியற்ற உடைந்த தேநீர்க் கோப்பையைத் தேடி எடுக்கிறார். அதை இடிபாடுகளில் தூக்கி வீச அது சுக்குநூறாகச் சிதறுகிறது. இதுதான் எங்கள் எதிர்காலம் என்கிறார் அந்த இளைஞர். இப்படி ஒரு தலைமுறை இளைஞர்கள் தங்கள் கல்வியையும், தொழிலையும், கனவுகளையும் இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர்.















Add Comment