சமூகநீதியும் சாதி அரசியலும்
பாட்டாளி மக்கள் கட்சி தன் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இருபதுக்கும் குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சிக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பதினெட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பாமகவின் பேரம் பேசும் வலிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதுதான் இதற்குக் காரணம்.
அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் இரண்டு பேரின் தலைமையிலும் இரண்டு பிரிவாகப் பிரிந்திருக்கிறது பாமக. கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் அன்புமணிக்குப் பின்னால் அணி திரண்டு நிற்க, தேர்தல் ஆணையமும் அன்புமணிக்கு ஆதரவாகவே இருக்கிறது. கட்சியின் பெயர் முதல் சின்னம் வரை தனக்குத்தான் சொந்தம் எனச் சொல்லி நீதிமன்றப் படியேறிய ராமதாஸுக்கு இப்போதைக்கு ஏமாற்றமே மிச்சம்.
அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. ராமதாஸ் திமுகவின் பக்கமோ தவெகவின் பக்கமோ இணைவார் எனச் செய்திகள் வந்தன. சாதியச் சார்போடும் மதச் சார்போடும் இருக்கும் கட்சிகளோடு கூட்டணியில் இருக்க மாட்டோம் எனச் சொல்லிவிட்டார் திருமாவளவன். கருத்து சொல்லும் நிலையில்தான் விசிக இருக்கிறது என்றாலும், கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவும் ராமதாஸைச் சேர்த்துக்கொள்வதற்கு உடன்படவில்லை. தவெகவின் பக்கமும் சாயாமல் இருந்த ராமதாஸ் இறுதியில் கூட்டணி முடிவை எடுத்துவிட்டார்.















Add Comment