அநுரகுமார திஸாநாயக்க, சகல அதிகாரமும் அமையப் பெற்ற ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்து எட்டு மாதங்களும், அவரது ஜே.வி.பி கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற அதீதப் பலத்துடன் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுமாகின்றன.
ஊழல் ஒழிப்பு, வீண் விரயமில்லாத சிக்கனமான நிர்வாகம், சகலருக்கும் சகலதும் போன்ற இடதுசாரிக் கோஷங்கள் தான் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு சகல இன மத பிரிவுகளுக்கு மத்தியிலும் மவுசைப் பெற்றுக் கொடுத்தன.
‘எழுபத்தாறு வருடங்களாக பிரபுத்துவப் பின்னணியில் வந்த குடும்பங்களிடம் மாறி மாறிச் சென்ற ஆட்சிகளின் உத்தியோகபூர்வமற்ற கொள்கையாக இனத்துவேசமே இருந்தது. கடைசியில் மொத்த நாடும் திவாலாகிப் போய் திருவோடு ஏந்தியது’ என்ற கருத்தை அநுரவும் தேசிய மக்கள் சக்தியும் சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஆணித்தரமாய் விதைத்தார்கள். மில்லேனியம் தலைமுறை அப்படியே வசியம் செய்தது போலப் பின்னால் வர இதுவே காரணமாய் அமைந்தது.
மேலும் ஈஸ்டர் குண்டுத்தாகுதல்கள் முதல் நாட்டைப் புரட்டிப் போட்ட ஊழல்கள் வரை சகலவிதமான குற்றங்களிலும் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப் போவதாகவும் அநுரகுமார திஸாநாயக்க சூளுரைத்திருந்தார்.















Add Comment