18 இரு
திருவனந்தபுரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தோன்றியது, நகுலன் எங்கே இருப்பார் என்பதுதான். அடுத்ததாக எழுந்தது, ஆ. மாதவன் கடை வைத்திருக்கும் சாலைத் தெரு எங்கே என்பது.
எழுத்தாளர்களையாகத் தேடிப்போக நாமென்ன காவிகட்டிக்கொண்டா வந்திருக்கிறோம் என உள்ளூரச் சிரித்துக்கொண்டான். அனுபவம் தேடிப் புறப்படுகிற எவனாவது கொஞ்சமாவது புத்தியிருந்தால் எழுத்தாளர்களையா தேடிப்போவான். அவர் அனுபவம் அவருக்கு. நம்முடையது நமக்கு என்றல்லவா இருந்திருந்திருக்கவேண்டும் – முதல்முறை சென்ற ஒன்றரை நாளைப்போல.
எங்குப் பார்த்தாலும் மரங்களாகவும் ஓரளவே வாகனங்களாகவும் இருந்ததால் திருவனந்தபுரம் மாநிலத்தின் தலைநகர் போலவே தோன்றவில்லை. நடமாடிய மனிதர்களும் மலையாளப் படங்களில் வருவதைப்போல வேட்டியும் சட்டையுமாக எளிமையாக இருந்தார்கள். சட்டைகள் என்னவோ முழுக்கைதான் என்றாலும் எல்லா கைகளும் மெட்ராஸ் பெட்டிக்கடைகளில் பார்க்கிற மலையாளிகளைப்போல முழங்கைக்கு மேல் மடித்துவிடப்பட்டிருந்தன. மெட்ராஸில் அடிக்கிற வெயிலுக்கு அரைக்கைச் சட்டையே புழுங்கும். இங்கே இருக்கிற குளுமைக்கு முழுக்கைச் சட்டை அணிவது நியாயம்தான் எனப் பட்டது. பிழைப்புக்காக மெட்ராஸுக்கு வந்தும் மலையாளிகள் பழக்கதோஷத்தில் உள்ளே பனியனும் அதற்குமேல் முழுக்கைச் சட்டையும் போட்டுப் புழுக்கம் தாங்கமுடியாமல் பாலா சிங் சொல்கிற ‘சகாவு‘கள் போல மடித்துவிட்டுக்கொள்கிறார்களோ என்னவோ.















Add Comment