பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி மதியம் வரை இஃப்தார் நிகழ்வுகளைப் பற்றியும், போக்குவரத்து நெரிசலைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகம், அன்றைய மாலைப் பொழுதில் மெல்லிய பதற்றத்துக்குள்ளானது. அன்று காலையில் யாராவது ஜோசியர் ‘அடுத்த முப்பது நாட்களில் அமீரகவாசிகளின் வாழ்க்கை முறை மாறிவிடும்’ என்று சொல்லியிருந்தால் கேலிசெய்கிறார் என்று நினைத்துக் கடந்து போயிருப்போம்.
ஆனால் உண்மையில் அமீரக வாழ்க்கைக் கடலின் ஓடம் எதிர்த் திசையில் நகர ஆரம்பித்து ஒரு மாதமாகிவிட்டது. யாருடைய அனுமதியும் இல்லாமல் எல்லோர் வாழ்க்கையையும் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உரையாடல்களை விட எச்சரிக்கைகள் சத்தமாகக் கேட்கின்றன. உண்மைகளை விட வதந்திகள் வேகமாகப் பரவுகின்றன. இரைச்சல்களை விட மௌனம் மனத்தைக் கனக்கச் செய்கிறது.
வாழ்க்கை மாறத் தொடங்கும் வரை அதன் அருமையை நாம் உணர்வதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு வாழ்க்கை கணிக்கக்கூடியதாக இருந்தது. காலைகள் எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அலாரங்களுடன் தொடங்கின. மாலைகள் நாங்கள் தீட்டி வைத்திருந்த திட்டங்களுடன் முடிந்தன.















Add Comment