இந்திய அரசாங்கம் கடந்த நிதியாண்டில் ஜம்மு காஷ்மீருக்கு ஒதுக்கிய பட்ஜெட் சுமார் $14.16 பில்லியன். பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனாகக் கேட்ட தொகை $7 பில்லியன். இந்த இரண்டு எண்களையும் நினைவில் வையுங்கள். இதன் பின்னால் ஒரு மாபெரும் சரித்திரமும் சமகால சதிராட்ட அரசியலும் உள்ளன. 2026க்கான மத்திய பட்ஜெட் வெளியாகியிருக்கும் இத்தருணத்தில் காஷ்மீரைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. என்ன அவசியம் என்பது இன்னும் சில மாதங்களில் புரிந்துவிடும்!
காஷ்மீரின் நவீன அரசியலையும் சிக்கல்களையும் புரிந்துகொள்வதற்கு, அதன் கலவையான கலாசார வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம். இது இறையாண்மை கொண்ட ஒரு ராஜ்ஜியத்தின் மீது திணிக்கப்பட்ட பல்வேறு அந்நியப் படையெடுப்புகளின் ஒரு வரலாறு.
ஆரம்பத்தில் காஷ்மீர், சைவ சமயத்தின் ஒரு முக்கிய மையமாக இருந்தது. பேரரசர் அசோகரால் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதுவும் அங்கு செழித்து வளர்ந்தது. கைபர் கணவாய் வழியாக இஸ்லாம் காஷ்மீருக்குள் நுழைந்தது. ஷாஹாமீர் என்ற குடியேறி, மன்னராக உயர்ந்து முதல் சுல்தான் ஆட்சியை நிறுவினார். இது இஸ்லாத்தைக் காஷ்மீரின் முக்கிய மதமாக மாற்றியது.
இஸ்லாம் பெரும்பான்மை மதமாக மாறியபோதும், சிறுபான்மையினரான பண்டிட்கள் பாரசீக மொழியில் புலமை பெற்றுப் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான அதிகார வர்க்கமாக மாறினர். பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் கைவினைஞர்களாகவும் விவசாயிகளாகவும் இருந்தனர். இது எதிர்கால வகுப்புவாதப் பதற்றங்களுக்கு ஒரு அடித்தளத்தை அமைத்தது.















Add Comment