சென்னை பனகல் பார்க்கில் உள்ள ஒரு டீக்கடை. கருப்பாக, சுருட்டை முடியுடன், கசங்கிய சட்டையுடன் அந்த இளைஞன் வருகிறான். பசியால் முகம் வாடி இருக்கிறது. சிகரெட்டும் டீயும்தான் காலை உணவு. பல நாட்களில் அதுவே மூன்று வேளை உணவாகவும் இருந்தது. அவனுடைய நண்பனும் வந்து சேர்கிறான். இருவரும் புகை பிடிக்கத் தொடங்குகிறார்கள்.
‘லச்சு, என்கிட்ட ஒரு கதை இருக்கு கேளு. இதை கலர்லதான் பண்ணனும். செட் எல்லாம் போடவே தேவையில்லை. போடவும் கூடாது. ஓப்பன் பண்ணா ஒரு கிராமம்…’
மூன்று மணிநேரம். கண்ணில் கனவுகள், நெஞ்சில் ஏக்கம், வயிற்றில் பசி. ஆனால் மனத்தில் உறுதியுடன் அந்த இளைஞர் கதையைச் சொன்னார்.
இப்படி அந்தக் கதையை அவர் சொன்னது முதல் முறையல்ல. முப்பதாவது முறை. அந்த இளைஞரின் பெயர் சின்னச்சாமி. அல்லி நகரத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சின்னச்சாமி. நண்பர்களுக்கு பால் பாண்டி. சினிமாவுக்கு என்று அவரே வைத்துக் கொண்ட பெயர் பாரதிராஜா. நண்பரின் பெயர் லட்சுமணன், பின்னர் பாரதிராஜாவை வைத்துப் படம் தயாரித்த சித்ரா லட்சுமணன்.















Add Comment