சில மாதங்கள் இடைவெளியில் நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இஸ்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர். இஸ்ரோவின் அனுபவமிக்க விஞ்ஞானிகளுக்குத் தனியார் விண்வெளி நிறுவனங்கள் வாரித் தரும் வசதிகளே அதற்குக் காரணம் என்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பெருமைமிக்க நிறுவனமான இஸ்ரோவுக்கு இது பெரும் பின்னடைவு என்ற குரல்கள் எழுந்துள்ளன.
அறுபதுகளின் ஆரம்பத்தில், சோவியத்தின் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தைத் தொடங்கியது இந்தியா. வளிமண்டலத்தை ஆய்வு செய்ய உதவும் செயற்கைக்கோளைத் தாங்கிய ராக்கெட் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அது விஷயமன்று. அந்த ராக்கெட்டின் உதிரிப் பாகங்கள், பழைய சைக்கிள் கேரியரில் வைத்துக் கொண்டுசெல்லப்பட்டன என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? அப்படித்தான் தொடங்கியது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி.
இது நடந்து சுமார் அறுபதாண்டுகளுக்குப் பின், நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம், நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா. தேசமே பெருமிதம் கொண்ட தருணம் அது. முதல் முயற்சியிலேயே செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்திய முதல் நாடு, ஒரே ராக்கெட்டில் நூற்று நான்கு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி உலக சாதனை படைத்த நாடு எனப் பல பெருமைகளை விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அடைந்துவிட்டது.
















Add Comment