117. வருடியவன்
ஆறரை அடி உயரமும் இரண்டடி பருமனுமாகப் பேருருக் கொண்ட ஓர் எண்கு மல்லாந்து கிடப்பது போலக் கிடந்தான். இயல்பிலேயே வேட்டன் அமர்ந்திருக்கும்போது அவனது கண்களையன்றி வேறெந்த உறுப்பும் வெளியே தெரியாது. கருத்து நீண்ட ரோமங்களை யாரோ எடுத்து வந்து பொருத்தித் தைத்தாற்போலவே தோன்றும். அவனது கைவிரல்களிலும் கால் விரல்களிலும் பன்னெடுங்காலமாகச் சிதைக்காமல் நீண்டு சுருண்டு, பழுப்பேறிக் கிடந்த உகிர்கள் அவன் முன்னொரு காலத்திலேனும் மனிதனாக இருந்திருக்கலாமென எண்ணிக்கொள்வதற்கு இருந்த ஒற்றைச் சாட்சியாகத் திகழும். அவன் எழுந்து நின்று நான் கண்டதில்லை. முதல் முறை அவனைக் கருதி அவனது சிந்தைக்குள் வந்தமர்ந்தபோது அவன் அமர்ந்த கோலத்திலேயே இருந்தான். இம்முறையும் அப்படியேதான் இருந்தான். ஒருக்கால் அவன் எழுந்து நிற்பானேயானால் அவனது தேகம் இடையளவு வளைந்திருக்குமென்று தோன்றியது.
தடாகத்திலிருந்து மல்லன் நீரெடுத்து வந்து வேட்டனின் முகத்தில் விட்டான். மயூரமுகி தனது சிறகுகளை அவனது முகத்துக்கு நேரே கொண்டு வந்து விசிறினாள். அவளது மகள், வேட்டனின் இரு பாதங்களிலும் தனது நாசியைப் பொருத்திச் சுரண்டுவது போலச் செய்தாள். முனி, இருந்த இடத்திலிருந்து ஒரு முசுவினைப் போலத் தாவி உயர்ந்து அம்மரத்தின் கிளையொன்றைப் பற்றி பலமாக உலுக்கினான். இலைகளில் படர்ந்திருந்த பனித்துளிகள் மழியெனச் சொரியவும் வேட்டன் மெல்லக் கண் விழித்தான். சுற்றுமுற்றும் பார்த்தபடி அவனே மெல்ல எழுந்து அமர்ந்துகொண்டான்.
மீண்டும் அவ்வெப்பத்தை உணர்ந்தாயா என்று மயூரமுகி கேட்டாள்.
















Add Comment