8 A.M. Metro என்றொரு இந்தித் திரைப்படம். அதில் நாயகிக்கு ரயில் பயணம் என்றால் பயம். தனியாக ரயிலில் செல்வதை அறவே தவிர்த்து விடுவாள். அப்படிப்பட்டவளுக்குத் தினமும் மெட்ரோவில் சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கலக்கத்துடன் நிலையத்துக்கு வருவாள். இதயம் தடதடவென அடித்துக் கொள்ளும். நெற்றியில் வியர்வை முத்து முத்தாகத் துளிர்த்து வழியும். கைக்குட்டையை வைத்து ஒற்றி ஒற்றி எடுப்பாள். மெட்ரோவின் தண்மையிலும் வியர்ப்பது நிற்காது. கண்ணாடிச் சில்லுகளைக் கொட்டியது இருக்கை உறுத்தும். மூடிய கதவுகள் மூச்சை அடைக்கும்.
இவளது நிலைமையைப் பார்த்த அந்நியர் ஒருவர் மறுநாள் அருகில் வந்து பேச்சுக் கொடுப்பார். இவளுக்குப் பிடித்த கவிதை, புத்தகம், குடும்பம், குழந்தைகள் என்று இயல்பாகப் பேச்சு விரியும். சூழலை மறந்து பேச்சில் மூழ்குவாள். மாலையிலும் இவள் செல்லும் நேரத்துக்கே வருவார். வருடக்கணக்கில் ஒட்டிக் கொண்டிருந்த பயம் ஓரிரு நாள்களிலேயே தீர்ந்து விடும். அந்நியருடைய சிநேகம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் மிகப் பெரிய உதவியாக அமையும்.
நாமாக எதுவும் கேட்காமல், பிறர் தாமாக முன்வந்து உதவி செய்யும் நிகழ்வுகள் யதார்த்தத்தில் நடப்பது அரிது. மெட்ரோவில் அது அரிதினும் அரிது. அவரவர் உலகத்தில் மூழ்கி இருப்பது, அடுத்தவர்களைக் கண்டு கொள்ளாமல் விடுவது, தெரிந்தவர்களுடன் மட்டும் பேசுவது என்பவைதான் மெட்ரோவின் பொதுவிதி.
















Add Comment