டிசம்பர் 14, 2025. பாண்டி (Bondi) கடற்கரை, சிட்னி. யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டத்துக்காகப் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். மாலை 6:45 மணிக்குக் கருப்பு உடையணிந்த இரு நபர்கள் மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
கொலையாளிகளில் ஒருவரான சாஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான நவீத் அக்ரம் (சாஜித் அக்ரமின் மகன்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘ஆஸ்திரேலிய யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒவ்வொரு ஆஸ்திரேலியரின் மீதான தாக்குதல்’ என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கொலையாளிகள் பயன்படுத்திய வாகனத்தில் ISIS கொடியும் வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகள் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் சமீபத்தில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் பயணம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உரிமம் பெற்ற துப்பாக்கிகளைக் கொலையாளிகள் எவ்வாறு பெற்றார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.















Add Comment