சிந்து சமவெளி நாகரிகத்தின் திடீர்ப் பாதுகாவலராக அவதாரமெடுத்திருக்கிறது பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் இந்தப் புதிய அவதாரத்துக்கு அவசர அவசரமாக அங்கீகாரம் அளித்துள்ளன. இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ள இத்தருணம், பாகிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பாகிஸ்தானில் அண்மைக் காலமாக நிகழ்ந்துவரும் சம்பவங்களோடு இந்த நிகழ்வை இணைத்துப் பார்க்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இத்தகைய பார்வை, பாகிஸ்தானின் உள்நோக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி அறிய உதவும் அகழ்வாராய்ச்சித் தளங்கள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ளன. அவற்றுள் பழைமை வாய்ந்தவையும், புகழ்பெற்றவையுமான ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் பாகிஸ்தானில் அமைந்துள்ளன. இன்று அறியப்பட்டவற்றுள் மிகப்பெரிய ஹரப்பா தளம், இந்தியாவிலுள்ள ராகிகர்ஹி ஆகும். அதோடு, முதிர்ச்சியடைந்த ஹரப்பா தளங்கள் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் பரவியுள்ளன. பல அறிஞர்கள் இதை சிந்து-சரஸ்வதி நாகரிகம் அல்லது சரஸ்வதி நாகரிகம் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்தத் தளங்களை இந்தியாவின் தளம், பாகிஸ்தானின் தளம் என்று பிரித்துப் பார்ப்பது வரலாற்று ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் அதைத்தான் தற்போது பாகிஸ்தான் செய்யத் தொடங்கியுள்ளது. பிரிப்பதையும் தாண்டி, இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தைத் தனதாக்கிக் கொள்ளும் முயற்சிகளையும் பாகிஸ்தான் முன்னெடுத்திருக்கிறது.
















Add Comment