நாட்டின் பதினைந்தாவது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் என்கிற சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன். அமைதியான அரசியல்வாதி, ஆனால் அவ்வப்போது சர்ச்சையாகப் பேசி மக்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்பக் கூடியவர். ஆர்எஸ்எஸ் தொண்டர், பாஜக உறுப்பினர், இரண்டு முறை மக்களவை உறுப்பினர், தமிழக பாஜக தலைவர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தெலுங்கானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களின் ஆளுநர் எனச் சீரான வளர்ச்சி கண்டது சி.பி. ராதாகிருஷ்ணனின் அரசியல் பயணம்.
1957ஆம் ஆண்டு தற்போதைய திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் என்ற கிராமத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவர் பிறந்த வருடத்தில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்தார். சி.பி. ராதாகிருஷ்ணனின் பெற்றோர் பொன்னுசாமி, ஜானகி இருவருக்கும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் பிடிக்கும். அதனால் அவர் பெயரையே தங்களுடைய மகனுக்குச் சூட்டினர்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு சிறுவயதிலேயே ஆர்எஸ்எஸ்ஸுடன் தொடர்பு ஏற்பட்டது. பதினாறு வயதில் ஆர்எஸ்எஸ் ஷாகாவுக்கும் (Shakha) பயிற்சி முகாம்களுக்கும் செல்லத் தொடங்கிவிட்டார். பாரதிய ஜனதா கட்சி உருவாகும் முன்பு ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவாக பாரதிய ஜன சங்கம் என்ற கட்சி இருந்தது. அக்கட்சியில் இணைந்து அவரது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.















Add Comment