இந்திய செமிகண்டக்டர் மிஷன் (India Semiconductor Mission) ‘செமிகான் இந்தியா 2025’ மாநாட்டை டெல்லியில் நடத்தி முடித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்த இந்த மாநாட்டில், டாடா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுடன், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற 48 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் 2500 பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ‘கருப்புத் தங்கம்’ என அழைக்கப்பட்ட கச்சா எண்ணெய் கடந்த நூற்றாண்டின் பொருளாதாரத்தைத் தீர்மானித்தது. அதேபோல, இந்த நூற்றாண்டில் டிஜிட்டல் வைரமாக செமிகண்டக்டர் சிப்கள் திகழும் எனக் குறிப்பிட்டார். மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விக்ரம்-32 பிட் சிப்பை பிரதமர் மோடியிடம் வழங்கினார். இது விண்வெளிப் பயணங்களுக்காக முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையின் மதிப்பு தோராயமாக 650 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்த மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் போன்ற துறைகளின் முக்கியமான உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது. ஆனால், இவற்றுக்குத் தேவையான செமிகண்டக்டர் சிப்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. 2021ஆம் ஆண்டு இந்திய செமிகண்டக்டர் கொள்கையை (India Semiconductor Policy – 2021) இந்திய அரசு வெளியிட்டது. புவிசார் அரசியல் பதற்றங்கள், கொரோனா அச்சம் போன்றவை காரணமாக செமிகண்டக்டர் துறையில் தற்சார்பு நிலையை அடைவது இதன் நோக்கமாகக் கூறப்பட்டது.














Add Comment