மெட்ரோவுக்குள் தனித் தீவாக இருப்பவர்கள் இளம் தலைமுறையினர். குழுவாக வருபவர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொள்வார்கள். தனியாகப் பயணிப்பவர்கள் காதுகளில் வண்ண வண்ணமான கவச குண்டலங்களை அணிந்து கொண்டிருப்பார்கள். கண்கள் கறுப்புத் திரையில் நிலைத்திருக்கும். சோகம், ஆச்சரியம், குறுநகை எனத் திரையில் தெரியும் காட்சிகளுக்கு ஏற்ப முகத்தில் பாவங்கள் மாறும்.
ஆனால் எந்த உணர்ச்சியும் வெடித்துக் கிளம்பாது. உதடுகளைக் குவித்தும், உள்புறமாக மடக்கியும் உணர்ச்சிகளை நாசூக்காக வெளிப்படுத்துவார்கள். அலைபேசியில் பேசும்போது உதடுகள் அசைவது மட்டும்தான் தெரியும்.
கூட்டத்தில் நெருங்கி நிற்கும்போதுகூட என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாகக் கேட்காது. அவர்களுடைய திறன்பேசித் திரைகளும் இருட்டாக இருக்கும். ‘மொபைல் டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும்போது திரையின் வெளிச்சத்தை அன்புகூர்ந்து அதிகப்படுத்துங்கள்’ என்ற தனி அறிவிப்பே இவர்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
















Add Comment