66 ஊர்க்குருவி
வந்திருப்பது டூரில்லை என்றாலும் டூர் வந்திருப்பதாக மனதிற்குள்ளாவது ஒப்புக்கொள்வதே நியாயம் எனத் தோன்றிற்று.
தொழுநோயாளிகளுக்காக 35ஆவது வயதில் ‘ஆனந்தவன்’னை ஸ்தாபித்து, அதன்பின் சோம்னாத் என்கிற இடத்திலும் தொடங்கி, போதாதென்று இந்தியாவை இணைத்துக்கட்ட கன்யாகுமரியிலிருந்து காஷ்மீரை நோக்கி இளைஞர்களைக்கொண்டு சைக்கிள் பயணம் போய்க்கொண்டிருக்கும் லட்சியவாதியான பாபா ஆம்தேவுக்கு, 72 வயதிலும் மாதிரி கிராமம் இளைஞர் கிராமம் போன்ற பெருங்கனவுகள் இருப்பதைப்போல் எல்லோருக்கும் இருக்கவேண்டியது கட்டாயமில்லை என்பதை வாய்விட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் நமக்கும் இருப்பதாகக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதே சரியெனப் பட்டது.
ஆனால் லே லடாக் என்கிற, பெயரே கேள்விப்படாத காஷ்மீரின் கொடுமுடிக்குப் போகிற பாக்கியம் கிடைக்க இருப்பதாகப் பேசிக்கொள்ளப்பட்டது. அதற்கு, உடல் ஆரோக்கியப் பரிசோதனைகள் செய்து ஆர்மி நம்மை தேர்ந்தெடுத்தாக வெண்டும் என்றும் சொல்லி கிலி கொள்ளவைத்தார்கள். போக விருப்பமுள்ளோர் பட்டியலில் சுதீரும் சுஜாதாவும் பெயர் கொடுப்பதாக இருந்தார்கள். நான் மட்டும் என்ன என்று தானும் பெயர் கொடுப்பதாகச் சொல்லிவைத்தான். பணம் எதாவது கேட்டால் என்ன செய்வது. ஊருக்கு வந்து தருவதாகச் சொல்லி சுந்தர ராமசாமியிடம்தான் கேட்டாக வேண்டும். சுதீரிடம் வாங்கியதே நிற்கிறது. அவன் வோல்டாஸில் தொழிலாளியாக இருப்பவன். அவனாலும் எவ்வளவு என்றுதான் கொடுக்கமுடியும். ராமசாமிதான் ஒரே இடம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில் நிட் இண்டியா படத்தின் ஒலிப்பதிவாளரான அருண் சர்மா நீள பிடியுடன் இருக்கும் பூம் மைக்குடன் போய்க்கொண்டிருப்பது கண்ணில் பட்டது. தேவி தியேட்டரில் சில சமயம் படம் ஓடிக்கொண்டிருக்கையில் மேற்புறம் இந்த மைக் தெரியும். டேய் மைக்டா என்று எவனாவது கத்தியதும் கொஞ்ச நேரத்தில் கருப்புப் பட்டை வந்து அதை மறைத்துவிடும்.
















Add Comment