இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது ஜெர்மனியில் யூதச் சமூகம் மீண்டும் துளிர்க்கும் என்பதை எவரும் கற்பனை செய்திருக்க முடியாது. 1948ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் மான்ட்ரூவில் நடைபெற்ற உலக யூத காங்கிரஸின் (WJC) முதல் மாநாடும் இதையே உறுதிப்படுத்தியது. ‘யூதர்கள் இனி ஒருபோதும் ஜெர்மனியில் குடியேறுவதில்லை’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வெறும் மாநாட்டுத் தீர்மானமாக மட்டுமல்லாமல், உலக யூதச் சமூகத்தின் ஒருமித்த குரலாகவும் ஒலித்தது.
ஜெர்மனிக்கான அமெரிக்க உயர் ஆணையர் ஜான் ஜே. மெக்லோய், இனி ஜெர்மனியில் யூதர்கள் நடத்தப்படும் விதம், அதன் ஜனநாயகத்துக்கான ‘லிட்மஸ் சோதனை’ (Litmus Test) என்றார். அதாவது லிட்மஸ் தாளை ஒரு கரைசலில் நனைக்கும்போது அது தன் நிறத்தை மாற்றி அந்தக் கரைசல் அமிலமா, காரமா எனக் காட்டிவிடும். அதுபோல ஜெர்மனியில் யூதச் சமூகம் தழைத்தால் அது ஜனநாயகம் மலர்ந்ததைக் குறிக்கும்; இல்லையெனில் அது சர்வாதிகாரம் தொடர்வதைக் குறிக்கும்.
பெரும்பாலான யூதர்கள் ஜெர்மனியை வெறுத்து மற்ற நாடுகளில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேல் என்னும் புதிய தேசத்தை உருவாக்கி அங்கு குடியேற விரும்பினர். ஆனால் சுமார் 15,000 யூதர்கள் ஜெர்மனியிலேயே தங்கிவிட்டனர். இதில் மூன்றில் இரண்டு பங்கினர் கலப்புத் திருமணங்கள் செய்தவர்கள். மற்றவர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குப் பிறகு இன்னொரு நாட்டுக்குச் சென்று புதிய மொழியைக் கற்க முடியாத மனச்சோர்வில் இருந்தவர்கள். இவர்களுடைய இந்த முடிவு உலக யூதர்களின் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.















Add Comment