பார்பரா புஷ்
‘நான் மிக உயர்ந்த மலைகளை ஏறியிருக்கிறேன். ஆனால் அவை உனக்காக ஏற்றிவைத்த ஒரு மெழுகுவர்த்திக்கு ஈடாகாது.’
இரண்டாம் உலகப் போரின்போது, பசிபிக் பெருங்கடலின் மேலே விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த இளம் விமானப் படை வீரர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ், தன் காதலி பார்பரா பியர்ஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்த வரிகள் இருந்தன.
மரணத்தின் நிழல் தன்னைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்த அந்த நாட்களில், புஷ்ஷின் வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்தது பார்பராவின் நினைவுதான். போரின் புகைமண்டலங்களுக்கிடையே எழுதப்பட்ட அந்தக் காதல் கடிதங்களில் அன்பும் ஏக்கமும் நிரம்பியிருந்தன. அந்த வார்த்தைகளில் மலர்ந்த காதல், பார்பரா பியர்ஸை பார்பரா புஷ்ஷாக மாற்றியது மட்டுமின்றி, பின்னாளில் அமெரிக்காவின் இதயத்தில் இடம்பிடித்த ஒரு முதல் பெண்மணியை உருவாக்கியது.
வெள்ளி நிறத் தலைமுடி, பார்ப்பவரை வசீகரிக்கும் புன்னகை, முத்துமாலை – இவைதான் ‘பார்’ என தன் காதலனால் அழைக்கப்பட்ட பார்பரா புஷ்ஷின் அடையாளம்.
பள்ளி இறுதியாண்டில் ஆரம்பித்த காதல், 1945ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று திருமண பந்தத்தில் உறுதியானது. அவர்களின் காதல் கதை 73 ஆண்டுகள் நீடித்தது. இருவருக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர். வாழ்க்கை இனிமையாக இருந்தது. ஆனால் விதி வேறு திட்டம் வைத்திருந்தது. 1953ஆம் ஆண்டு, வாழ்க்கை பார்பராவுக்கு மிகக்கொடிய அடியைக் கொடுத்தது. அவரது மூன்று வயது மகள் ராபின் லுகேமியாவால் இறந்தார். இந்தச் சோகத்தில் அவரது கூந்தல் ஒரே இரவில் நரைத்துவிட்டது. 28 வயதிலேயே அவர் வயது முதிர்ந்த பெண்ணைப் போலக் காணப்பட்டார். ஆனால் வெளித்தோற்றத்தைவிட, உள்ளுக்குள் நடந்த மாற்றம் பயங்கரமானது. மகளின் மரணத்திற்குப் பின், பார்பரா தீவிர மனச்சோர்வில் ஆழ்ந்தார்.















Add Comment