சென்ற வாரம் கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவகுமார் மைசூர் பற்றிப் பேசியிருக்கிறார். இது திட்டமிட்டுக் கட்டிய நகரம், இதை மேலும் வளர்ப்பது தம் அரசின் குறிக்கோள் என்று கூறியிருக்கிறார். இவ்வருட தசரா விழாவில் கம்பளா என்னும் வயல் சேற்றில் நடக்கும் எருமை ஓட்டம் இடம்பெறுவதைக் குறித்து தாம் முடிவு எடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இதை மைசூர் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்த்துப் பேசியிருக்கிறார். இவர் உடையார் வம்சாவளியின் யதுவீர். இங்கிருப்பவர்கள் கம்பளா பாரம்பரிய தசராவில் சேராது என்கிறார்கள்.
நாட்டில் வேறெங்குமின்றி தசரா இங்கு அரசு விழா. வரலாற்றில் தசரா விஜயநகர சாம்ராஜ்ய விழாவாகவே தொடங்கியது. 1511 உம்மத்தூர் போருக்குப் பின் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் கொண்டாடப் பட்டது. இங்கிருந்த பாளையக்காரர் திருமலையை முதலாம் ராஜ உடையார் வென்றபோது இவ்விழா மைசூருக்கு நகர்ந்தது.
ஒரு நகரம் உருவாவது கால ஓட்டத்தில் ஒரு பெரும் சிதல் புற்று எழுவது போல எனலாம். கோடி எறும்புகள் சேர்ந்து சிறுகச் சிறுக என்னவென்று தெரியாமல் கட்டுகின்றன. அப்படி வளர்ந்தும் கரைந்தும் உருவம் பெறும் நகரம் மேகம் போல் வடிவமற்றதாகவே இருக்கிறது. ராணி எறும்புகள் போல் பெரிய பங்கைச் சிலர் செய்கிறார்கள். இடைவிடாத போர்களும் அரசுகளின் சுரண்டல்களுமே மழையெனச் சிதலைக் கரைப்பவை.
















Add Comment