எப்போதும் செட்டிநாடு, மலபார், அமராவதி உணவகங்கள் என்றால் பயப்படாமல் சரியென்பேன். சாதமோ டிஃபனோ, அதோடு குழம்பை ஊற்றிக் குழைத்துப் பசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை. காய்ந்துபோன ரொட்டி, ஃபிரைட் ரைஸை மெல்லும் அளவுக்கு எனக்குப் பயில்வான் பற்கள் கிடையாது. வாய்க்குள் நெருப்பை விழுங்கி வித்தை காட்டுவார்களே? அதுபோல உணவுத்தட்டிலும் நெருப்பைப் பற்றவைத்துப் பயமுறுத்தும் எதையும் இனாமாகக் கொடுத்தாலும் உண்ண மாட்டேன். ஜீரா சாதத்தை வறுத்த பன்னீர் அல்லது சிக்கனுடன் சேர்த்து எத்தனை நேரம் மென்று விழுங்குவது?
இத்தகைய கொள்கைவாதியை ஒருநாள் அரேபிய உணவகத்துக்குக் கடத்திச் சென்றுவிட்டார்கள். எனக்கு உகந்தது ஷவர்மா என்று ஆர்டரும் செய்துவிட்டார்கள். பசி வந்து கொள்கை பறந்துபோனது. பிறந்த குழந்தையைப் பொம்மை போட்ட துண்டில் சுற்றி முகம் மட்டும் தெரியுமாறு நமது கைகளில் கொடுப்பார்களே? அதுபோல உள்ளிருக்கும் சிக்கனை வெள்ளைநிற ரொட்டியாலும், மெலிதான பேப்பராலும் சுற்றி ஷவர்மாவைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அந்த அப்பாவிக் குழந்தையின் முக்காட்டை விலக்கி நானும் கொஞ்சத் தயாரானேன். முதல்முறை அந்த பேப்பருடன் ஷவர்மாவைச் சாப்பிட்டு ஜீரணித்த கதைகளைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தது என்னைக் கடத்திச்சென்ற கும்பல்.















Add Comment