மெட்ரோ ரயில் பெட்டிகள் கறுப்புக் கண்ணாடிகளால் மூடப்பட்டவை. மூச்சு முட்டும் அளவு இறுக்கம் கொண்டவை. அந்த இறுக்கத்தைத் தளர்த்தும் வல்லமை குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக, முதல்முறை மெட்ரோவில் பயணம் செய்யும் சிறுவர்கள்.
‘அடுத்த நிறுத்தம் ஆலந்தூர், இடதுபுறம் உள்ள கதவுகள் திறக்கும்’ என்று ஒலிக்கும் பதிவுக் குரலோடு சேர்ந்து ராகம் பாடுவார்கள். ரயில் நின்றவுடன் கைகளைக் கொக்கிபோலச் சுருக்கி, உடலை முறுக்கி, நின்ற இடத்திலிருந்தே கதவுகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்துவிடுவார்கள்.
பளபளப்பான இருக்கைகளும், நீலக் கம்பளம் விரித்தது போன்ற தரையும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். எட்டாத உயரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் கைப்பிடிகளை எம்பித் தொடுவது சாகசமாகத் தோன்றும். நடுவில் நின்றிருக்கும் நாலிதழ் தூண் ஓர் அட்சய பாத்திரம். அதற்குள் தலையை நுழைப்பது. முடியாத பட்சத்தில் இடுப்பை நுழைத்து உட்கார்ந்து பார்ப்பது, முட்டியை மடக்கிக் கவ்விப் பிடித்துத் தொங்குவது எனப் புதுப்புது சாகசங்கள் உற்பத்தியாகும் இடம்.















Add Comment